Ponniyin Selvan Audio Book Tamil Rejiya”
வாள் தவறித் தரையில் விழுந்தபோது எழுந்த ஒலியுடன் நந்தினியின் சோகம் ததும்பிய மெல்லிய சிரிப்பின் ஒலியும் கலந்தது.
அவள் பரபரப்புடன், “ஐயா! தெய்வத்தின் சித்தம் வேறு விதமாயிருக்கிறது. வாள் இங்கேயே கிடக்கட்டும். தாங்கள் உடனே போய் மறைந்து கொள்ளுங்கள்!” என்றாள்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வந்தியத்தேவன் குனிந்து வாளை எடுக்கப் போனான். அதன் கூரிய நுனிப் பகுதியைப் பிடித்துத் தூக்க முயன்றான். அதே சமயத்தில் அந்த வாளின் பிடியை ஒரு காலினால் மிதித்துக் கொண்டாள் நந்தினி.
“வேண்டாம்! இளவரசர் காதில் வாள் விழுந்த சத்தம் கேட்டிருக்கும். இங்கே வாள் இல்லாவிட்டால் அவர் மனத்தில் சந்தேகம் உண்டாகும். ஏற்கெனவே, தங்கள் மீது அவருக்குச் சந்தேகம். போய் விடுங்கள்! முன்னொரு தடவை மாயமாய் இங்கிருந்து மறைந்ததுபோல் இந்தத் தடவையும் மறைந்து போய் விடுங்கள்!” என்றாள்.
வந்தியத்தேவன் வாளின் முனையைப் பிடித்து எடுக்க முயன்றதில் அவன் கையில் சிறு காயம் உண்டாயிற்று. அவன் வாளை விட்டுவிட்டு நிமிர்ந்தான். அவன் உள்ளங் கையில் இலேசாக இரத்தம் கசிந்ததை நந்தினி பார்த்தாள்.
“நான் உமக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன். என் கையால் என் உடன்பிறந்தானைக் கொல்ல மாட்டேன். நீர் தப்பித்துக் கொள்ளும். உம்மை இங்கே அவர் கண்டுவிட்டால்…!”
“போய்விடுங்கள்! உடனே போய்விடுங்கள்!” என்று மணிமேகலையும் சேர்ந்து கெஞ்சினாள். காலடிச் சத்தம் மேலும் நெருங்கிக் கேட்டது.
வந்தியத்தேவன் வேண்டா வெறுப்பாக யாழ்க்கருவிகளின் களஞ்சியத்தை நோக்கி விரைந்து சென்றான். களஞ்சியத்தின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று மறைந்தான். காலடிச் சத்தம் வெகு சமீபத்தில், வாசற்படிக்கருகில், கேட்டது.