அத்தியாயம் 26 – இரத்தம் கேட்ட கத்தி (PS-2)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

அந்த வீர வைஷ்ணவர் எப்படி அங்கு வந்து சேர்ந்தார் எதற்காக வந்திருக்கிறார் என்பதைப்பற்றி வந்தியத்தேவனுடைய உள்ளம் கலக்கமடைந்திருந்தது. ஆயினும் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

“என்ன வேடிக்கையைச் சொல்வது? சற்று முன்னால் தான் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்த்தால் தாங்கள் சுவரேறிக் குதித்து வருகிறீர்கள். ‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுக்கும்’ என்று சொல்கிறார்களே, அது சரிதான்!” என்றான்.

“அப்பனே! சற்று முன்னால் என்னைப் பற்றி நினைத்தாயா? எதற்காக இந்த நரமனுஷனைப் பற்றி நீ ஏன் நினைக்க வேண்டும்? சாக்ஷாத் இராமபிரானைப் பற்றி நினைத்தாலும் பயன் உண்டு…”

“தங்கள் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். முதலில் நான் இராமபிரானைப் பற்றித்தான் நினைத்தேன். இங்கே வரும்போது கடலில் அக்கரையில் இராமேசுவரக் கோபுரம் தெரிந்தது. இராமர் அங்கேதானே சிவனைப் பூஜை செய்து இராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொண்டார் என்று எண்ணினேன்…”

“நில்லு, தம்பி! நில்லு!”

“நிற்க முடியாது, சுவாமிகளே! என்னால் நிற்க முடியாது. நடந்து நடந்து, நின்று நின்று, என் கால்கள் கெஞ்சுகின்றன. தாங்களும் கருணைபுரிந்து உட்காருங்கள். அப்புறம் இராமரைப் பற்றி நினைத்தேனா? உடனே இராம பக்தனாகிய அனுமாரைப் பற்றி நினைவு வந்தது. அனுமாரைப் பற்றி எண்ணியதும் தங்கள் நினைவு வந்தது. உடனே பார்த்தால், தாங்களே வந்து விட்டீர்கள். சுவரேறிக் குதித்து மட்டும் வந்தீர்களா, அல்லது அனுமாரைப்போல் கடலையே தாண்டிக் குதித்து வந்தீர்களா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *