அத்தியாயம் 37 – வேஷம் வெளிப்பட்டது (PS-3)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

பயங்கரத் தோற்றம் கொண்டிருந்த அந்தக் காளாமுக சைவரை அந்த நேரத்தில் அந்த இடத்தில் பார்க்கும் வந்தியத்தேவன் ஒரு கணம் திகிலடைந்தான். பிறகு அவனுக்கு இயற்கையான துணிச்சல் திகிலை விரட்டியடித்தது. “இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? எங்கே?” என்று சிந்தித்தான். ஆம், ஆம்; அரிச்சந்திர நதிக்கரையில் மரத்தடியில் படுத்திருந்த போது இரண்டு பேர் வந்து உற்றுப் பார்த்துவிட்டுப் போகவில்லையா? அவர்களில் ஒருவன் இவன்! அவ்வளவுதானா? ஒரு தடவை மட்டும் பார்த்த முகமா இது? அந்தக் கூரிய பார்வையுள்ள கண்களை வேறு எங்கேயும் பார்த்ததில்லையா?

இதற்குள் காளாமுக சைவன் அவனை உற்றுப் பார்த்து விட்டு, “ஹா! ஹா! ஹா!” என்று சிரித்தான். அந்தக் குரல் அடிக்கடி கேட்ட குரல்போல் இருக்கிறதே?

“அட சே! நீ தானா? உனக்காகவா இந்த நள்ளிரவில் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன்?” என்று காளாமுக சைவன் கூறியபோது, அவன் வேண்டுமென்று சிறிது குரலை மாற்றிக் கொண்டு பேசியதாகத் தோன்றியது.

“பின்னே, யாருக்காக வந்தாய்?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

“இளவரசரைத் தேடிக் கொண்டு வந்தேன்!” என்றான் காளாமுகன்.

“எந்த இளவரசரை?”

“உனக்கென்ன அதைப்பற்றி? நீ ஏன் கேட்கிறாய்?”

“நானும் ஒரு இளவரசன்தான்; அதனால் தான் கேட்டேன்.”

“இளவரசனுடைய முக லட்சணத்தைப் பார்…!”

“என் முகலட்சணத்துக்கு என்ன ஐயா, குறைவு? உம்மைப் போல் தாடி மீசையும், சடைமுடியும், எலும்பு மாலையும் அணிந்தால் என் முகம் இலட்சணமாகி விடுமா?”

“அணிந்து பாரேன்! அப்போது தெரியும்.”

“தாடி மீசையும் ஜடைமுடியும் எத்தனைநாளில் வளரும்?”

“அது என்ன பிரமாதம்? ஒரு நாளில் வளர்ந்து விடும். வேண்டுமென்றால் ஒரு நாழிகையில் கூட…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *