அத்தியாயம் 52 – கிழவன் கல்யாணம் (PS-1)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

மாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம் அளிக்கும். அவற்றில் ஒரு சிறிய பாறையையேனும் மாமல்லபுரத்து மகா சிற்பிகள் சும்மா விட்டுவிடவில்லை. அந்தந்தப் பாறைக்குத் தகுந்தபடி பெரிதாகவும் சிறிதாகவும் காட்சிகளைக் கற்பனை செய்து அழியாச் சிற்ப உருவங்களை அமைத்து வைத்தார்கள்.

அவ்விதம் சிறிய பாறைகள் இரண்டு எதிரெதிராக அமைந்திருந்த இடத்தை ஆதித்த கரிகாலனும் மற்ற இருவரும் அணுகினார்கள். ரதத்திலிருந்து இறங்கிச் சென்றார்கள். இரண்டு பாறைகளையும் இரண்டு சிம்மாசனங்களாகக் கருதி, கரிகாலனும் மலையமானும் அமர்ந்தார்கள். பார்த்திபேந்திரன் அவர்களுக்குச் சற்று அப்பால் நின்றான். அடிக்கடி அலைகள் வந்து அவர்களுடைய முழங்கால் வரையில் நனைத்துக் கொண்டிருந்தன. அலைகள் பாறைகளில் மோதியபோது எழுந்த திவலைகள் சில சமயம் அவர்கள் மீது முத்து மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாகப் பல்வகைப் பண்டங்களைச் சுமந்து கொண்டு கடலைக் கிழித்துக் கொண்டு சென்றன. அப்பண்டங்களைப் படகிலிருந்து இறக்கிப் பாய்மரம் விரித்து நின்ற பெரிய மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

“இரட்டை மண்டலப் படையெடுப்புக்காகச் சேகரித்து வைத்த பண்டங்களெல்லாம் இலங்கைக்குப் போக வேண்டியிருப்பதை நினைத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது!” என்றான் பார்த்திபேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *