அத்தியாயம் 28 – இராஜபாட்டை (PS-2)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

மதங் கொண்ட யானை ஆழ்வார்க்கடியானுடைய கைத்தடிக்கும் அவனுடைய அதட்டலுக்கும் பயந்து நின்று விடுமா, என்ன? தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய கதி அதோ கதிதான் என்பதில் இனிச் சந்தேகமில்லை! துணைக்கு வந்த வீரர்கள் இருவரும் நின்ற இடத்தில் நின்றபடியே ‘ஹாய்’ என்று கூச்சலிட்டார்கள். வந்தியத்தேவன் தன் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்த வேலைத் திரும்ப எடுத்துக்கொண்டு கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்க்க எண்ணினான். அதே சமயத்தில் ஆழ்வார்க்கடியான் தன் கையிலிருந்து தடியை வீசி மத யானை மீது எறிந்தான்.

மறு கணம் ஆழ்வார்க்கடியானைக் காணவில்லை. அவனுடைய தலைப்பாகை காற்றில் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் விழுந்தது. ஆழ்வார்க்கடியான் என்ன ஆகியிருப்பான் என்று சிந்திப்பதற்குள்ளே அதைக்காட்டிலும் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. அவன் மறைந்த இடத்துக்கருகில் சென்ற யானை திடீரென்று மண்டியிட்டது போல் முன் கால்களை மடக்கிக் கொண்டு முன்புறமாகச் சாய்ந்தது. அந்த வனப்பிரதேசம் முழுதிலும் எதிரொலி செய்த ஒரு பயங்கரமான பிளிறல் சத்தம் கேட்டது. மறுகணத்தில் மலை போன்ற அந்த மத யானையின் உருவம் முழுவதும் மறைந்துவிட்டது. யானை அந்தப் படு பாதாளத்தில் உருண்டு உருண்டு விழுந்தபோது சரிந்து விழுந்த பாறைகளின் தூசிப் படலம் மேலே எழுந்து பரவியது. என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துத் தெரிந்து கொள்வதற்கு வந்தியத்தேவனுக்குச் சிறிது நேரம் ஆயிற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *