அத்தியாயம் 29 – யானைப் பாகன் (PS-2)

Ponniyin Selvan Audio Book Tamil Rejiya

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் – இந்தக் கதை நடந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், – வலஹம்பாஹு என்னும் சிங்கள அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய காலத்திலும் தமிழர் படை இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றது. அப்போது வலஹம்பாஹு என்பான் தலைநகரிலிருந்து தப்பி ஓடித் தம்பள்ளை என்னுமிடத்திலிருந்த மலைக்குகையில் ஒளிந்து கொண்டிருந்தான். பிறகு அவன் மீண்டும் படை திரட்டிக்கொண்டு சென்று அநுராதபுரத்தைக் கைப்பற்றினான். அவனுக்கு அபயமளித்திருந்த மலைக் குகையை மேலும் குடைந்தெடுத்துக் கோயிலாக்கினான். புத்தர் பெருமானிடம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக அந்தக் குகைக்குள்ளே பெரிதும் சிறிதுமாய்ப் பல புத்தர் சிலைகளை நிர்மாணிக்கச் செய்தான். நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை நிர்மாணித்த சிற்பிகளுக்குத் தங்கள் சிற்பத்திறனை முழுதும் காட்டிவிட்டோம் என்று திருப்தி ஏற்படவில்லை. எனவே ஹிந்து தெய்வங்களின் படிமங்கள் சிலவற்றையும் புத்தர் சிலைகளுக்கு இடையில் நிர்மாணித்து வைத்தார்கள். அந்த அற்புதமான சிற்பக்கலை அதிசயங்களை இன்றைக்கும் தம்பளை என்னும் ஊரில் உள்ள குகைக்கோயிலில் காணலாம்.

வந்தியத்தேவன் அந்தப் புண்ணிய ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது ஒரு புது உலகத்துக்குள் வந்துவிட்டதாகவே அவனுக்குத் தோன்றியது. புதுமலர்களின் நறுமணம் அவனுக்கு மயக்கத்தை அளித்தது. வீதி முனைகளில் தாமரை மொட்டுக்களும் செண்பக மலர்களும் குப்பல் குப்பலாகக் குவிக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் அம்மலர்களை வாங்கி அழகிய ஓலைக் கூடைகளில் எடுத்துக்கொண்டு கோயிலை நோக்கிச் சென்றார்கள். ஸ்திரீகளும், புருஷர்களும் அடங்கிய அந்தப் பக்தர் கூட்டங்கள் தெருக்களை அடைத்துக்கொண்டு சென்றன. காவித்துணி அணிந்த புத்த சந்நியாசிகளும் அங்கங்கே காணப்பட்டார்கள். “சாது, சாது” என்ற பெருங் கோஷம் பக்தர் கூட்டத்திலிருந்து எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *